
அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் இடையேயான 2வது சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன
ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை வடகொரியா சம்பாதித்து வந்தது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா, வடகொரியா இடையே போர் மூளும் அளவுக்கு மோதல் போக்கு நீடித்தது. இந்நிலையில் இருநாட்டு தலைவர்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார். அதன் பிறகு இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் ஏற்பட்டாலும், அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது, வடகொரியா மீதான பொருளாதார தடையை நீக்குவது போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இதற்கு தீர்வுகாண 2வது உச்சி மாநாடு நடத்தி பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இந்த மாத இறுதியில் நடக்கலாம் என தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.